Published Date: February 27, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரையில் வான் திட்டத்தை துவக்கி வைத்து, வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டிற்கு ஒரு தொழில் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அழித்து வாழ்வாதாரத்தை உருவாக்கும் வகையில் மதுரை மத்திய தொகுதியில் நலிவடைந்த வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பெண்களின் மூலம் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வருமானம் ஈட்டிட வழி செய்யும் வான் திட்டத்தை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:
"ஆண்களுக்கு ஏற்ப பெண்களுக்கு சம உரிமை என்பது திராவிட இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும். கல்வி, சொத்து, தொழில் உரிமை பெண்களுக்கு வழங்கப்படுவதால் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள தொழில் பேட்டைகளில் பெண்களால் செய்யப்படும் தொழில் உற்பத்திகளில் 46 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு பெருமை. பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது தான் அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று.
மாநில வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இன்னும் சில பல அறிவிப்புகள் வர இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் துவக்க இருக்கின்றன. மதுரையில் வீட்டிற்கு ஒரு ஸ்டார்ட் அப் வீட்டிற்கு ஒரு தொழில் என்ற சூழ்நிலையை கொண்டு வரப்படும். அதற்குப் பல வகையிலும் அரசு ஊக்கமளித்து வருகிறது. மதுரை மத்திய தொகுதியில் சுய உதவிக் குழு பெண்களுக்கு ஒரே நாளில் ரூ. 512 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நமது குறை நிதி அல்ல. நமக்கு தேவை செயல்திறன் வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி என்பது ஒரு அடித்தளம். இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து நிறுவனங்களை இணைத்து வெற்றிகரமான பொருட்களை உருவாக்க முயற்சி செய்யப்படும் " என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி பொன் வசந்த், மத்திய மண்டலத்தலைவர் பாண்டி செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
Media: Dinakaran